Tuesday, September 7, 2010

பழைய கதை! புதிய பார்வை!

பழைய கதை! புதிய பார்வை!

VISWAM's படம்
ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்ள வெகு நாட்களாக ஆசை.
முயலின் வேகத்துக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியாது, உன் தகுதியை மறந்து ஆசைப் படாதே என்று மற்றவர்கள் கேலி செய்ய, ஆமைக்கு ஒரே அவமானமாக போய் விட்டது.
சரி,விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு,முயற்சி எதுவுமே செய்யாமல் இருப்பதை விட முயன்று தோற்பது ஒன்றும் அவமானம் இல்லை என்று நினைத்த ஆமை முயலுடன் போட்டி போட தயாரானது.
போட்டி நாள் அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க, போட்டி நேரமும் வந்தது, போட்டியை துவக்க நடுவர் கொடி அசைத்த நொடியில் முயல் ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.
பொறுமை கதை முடியவில்லை!.
தன் தகுதிக்கு ஆமையை ஒரு முறை வெல்வது எப்படி பெருமையாக முடியும் என்று நினைத்த முயல், ஆமையை அவமான படுத்தும் கர்வத்தோடு மீண்டும் வேறு ஒரு பாதையில் போட்டிக்கு அழைக்க, தன்னம்பிக்கை கொண்ட ஆமையும் சம்மதித்தது.
இந்த முறை கடந்த முறை வெற்றி பெற்ற கர்வத்தில் போட்டி நடிவில் முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க மனம் தளாரத ஆமை மெது மெதுவாக ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.
கண் முழித்த முயலுக்கு அவமானமாக போய் தான் என்ற கர்வத்தால் வந்த வினையை நினைத்து வருந்தியது, அதனால் ஆமையை மீண்டும் ஒரு முறை முயல் போட்டிக்கு அழைத்தது, ஆமையும் சம்மதித்தது.
டேய் சிங்கக்குட்ட்ட்ட்டி.... என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு கேட்கிறது.
பொறுமை பொறுமை! கதை இன்னும் முடியவில்லை!.
இந்த முறை மீண்டும் அதே பாதையில் போட்டி துவங்க, தோல்வியின் அவமானத்தை மறக்காத முயல் முன் போல் சுறுசுறுப்பாக ஓடி வெற்றி இலக்கை அடைந்து ஆமையை கேவலமாக பார்த்தது.
ஆமை சற்றும் மனம் தளராமல், நாம் ஏன் மீண்டும் ஒரு முறை போட்டியை வைத்துக்கொள்ள கூடாது? என்று கேட்க!ஆமையின் மன உறுதியை பார்த்து முயலோடு சேர்ந்து அனைவருமே வியந்துவிட்டார்கள்.
முயலும், நீ தோல்வி அவமானத்தில் உளறுகிறாய்.
எதோ ஒரு முறை நான் தூங்கி விட்டேன், இனி எத்தனை முறை போட்டி வைத்தாலும் என்னை உன்னால் வெற்றி பெறவே முடியாது. இதை உனக்கு நிருபிக்கவே மீண்டும் போட்டிக்கு நான் சம்மதிக்கிறேன் என்று சொன்னது.
முயல் ஆணவத்துடன் சொன்னதை பொறுமையாக கேட்ட ஆமை, கடந்த இரண்டுமுறை நீ ஓடு பாதையை தேர்ந்து எடுத்தாய், ஆகவே இந்த முறை நான் ஓடு பாதையை தேர்ந்து எடுக்கட்டுமா? என்று அமைதியாய் கேட்க, முயலும் சம்மதித்தது.
ஆக, ஆமை தேர்வு செய்த பாதையில் மூன்றாவது முறை போட்டி தயாரானது, போட்டி ஆரமித்ததும் ஓடு தளத்தில் வேகமாக ஓடிய முயல் உடனே வந்த திருப்பத்தில் திரும்பியதும் திகைத்து நின்றது.
காரணம் பாதையின் குறுக்கே ஓடிக்கொண்டு இருந்த ஆறு!, எங்கே இறங்கி நீந்தினால் ஆற்றில் அடித்து கொண்டு போய்விடுவோமோ என்ற பயம், மெதுவாக வந்த ஆமை அழகாக ஆற்றில் இறங்கி நீந்தி கரையில் இருந்த வெற்றி இலக்கை அடைந்தது.
தன் பலத்தை மட்டுமே நினைத்திருந்த முயலுக்கு இப்போது ஆமையின் பலமும் தன் பலவீனமும் புரிந்தது.
பொறுமை! பொறுமை! கதை இங்கும் முடியவில்லை!.
ஆமையின் தனம்பிகையும் புத்திசாலி தனமும் புரிந்தாலும், முயலுக்கு ஒரு ஆமையிடம் தன் தோல்வியை தாங்க முடியவில்லை.
சரி, இரண்டுக்கு இரண்டு என்று சம வெற்றியில் இருக்கும் நாம், கடைசியாக ஒரு போட்டியை வைப்போம்.
இதுவே "பெஸ்ட் ஆப் பைவ்" இதன் வெற்றியை பொறுத்து நம்மில் யார் இறுதி வெற்றியை அடைவது என்பது முடிவாகட்டும் என்று ஆமையிடம் சொன்னது.
சற்றும் மனம் தளராத ஆமை, அதே போல் இந்த முறை ஓடு பாதையையும் முன்பு போல் இல்லாமல் இருவரும் சேர்ந்து தீர்மானிப்போம் என்றது.
உடனே கடந்த முறை அனுபவத்தை மனதில் கொண்ட முயல், சரி ஆகட்டும், ஆனால் இப்போது நாம் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டதால் என் பாதையில் நான் உன்னை என் முதுகில் தூக்கிக்கொண்டு ஓடுகிறேன், அதே போல உன் பாதை வந்ததும் நீ என்னை முதுகில் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும் சம்மதமா? என்றது.
ஆமையும் சம்மதித்து, போட்டி ஆரமிக்க, முதுகில் ஆமையை சுமந்த படி முயல் பாதையில் ஓடியது, வழியில் காட்டு ஆறு வர, ஆமை இறங்கி முயலை சுமந்த படி ஆற்றில் நீந்தியது.
மறு கரைக்கு சென்று ஆற்றில் இருந்து ஆமையும், ஆமை முதுகில் இருந்து முயலும் தரையில் காலை வைக்க அங்கு வெற்றியின் எல்லை கோடு இருந்தது.
இருவருமே சமமாக வெற்றியின் எல்லை கோட்டை தொட்ட சந்தோசத்துடன், இனி என்றும் நாம் இணை பிரியாத நண்பர்களாக இருப்போம் என்று முடிவெடுத்தன.
இப்படி முடிகிறது இங்கு என் கதை.

அன்புடன்
விஸ்வம்

No comments:

Post a Comment